திரைவிமர்சனம்

 

இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

வடிவேலு, யாமினி ஷர்மா, சுஜா, ராரீ, நாசர், தியாகு, மனோபாலா, குமரிமுத்து, ஓ.ஏ.கே. சுந்தர், இளவரசன், ரிஷிவந்திகா, உஷா நடிப்பில் கோபிநாத்தின் ஒளிப்பதிவில் வெளியாகியிருக்கும் படம் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'.
சபேஷ் முரளி இசையில், தம்பி ராமையா இயக்கத்தில், செவன்த் சேனல் தயாரித்துள்ளது.

இந்திரன் சாபத்தால் கல்லாக மாறும் ரம்பைக்கு மாலை அணிவிக்கிறார் லோக்கல் நாடக நடிகரான அழகப்பன்.
 
அழகப்பனின் அழகில் மயங்கி, மாலையிட்டவனே மணாளன் என்ற பூலோக பொது விதிப்படி இரவானால் அழகப்பனை இந்திரலோகத்துக்கு எடுத்துக் கொள்வார் ரம்பை. 
 
அங்கு இந்திரன், எமதர்மன் என சகலரையும் கலாய்த்து, மனிதர்களின் முக்காலமும் குறித்து வைத்திருக்கும் சுவடியை படித்து பூலோகத்தை புண்ணிய பூமியாக மாற்றுகிறார் அழகப்பன். இந்த அம்புலிமாமா பூச்சுற்றல் இந்திரனின் சாபம், அதற்கான விமோசனம் என்று ஓடி முடிவதற்குள் கொட்டாவியும், குட்டித் தூக்கமும் வந்து விடுகிறது.
 
தமிழ் சினிமா வரலாற்றில் அனைத்துக் காட்சிகளிலும் நாயகன் முகம் காட்டும் ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும். நாடக நடிகர் அழகப்பன், இந்திரன், எமதர்மன் என வடிவேலுவுக்கு மூன்று வேடங்கள். போதாதற்கு தொண்ணூறு வயது கிழவன் வேடம் வேறு. இத்தனையிலும் மொத்தமாக ஸ்கோர் செய்வது எமதர்மன்தான்.
 
கரகர குரலும், எருமை கனைப்புமாக அவரது இருப்பும், செருக்கும் திரையரங்கை திணறடிக்கிறது. அதிலும் அந்த எருமை மாடு கிராபிக்சும் 'நல்லவரா கெட்டவரா' காமெடியும் அதகளம். 
 
இந்திரன் வடிவேலுவின் மன்மத விளையாட்டு நாரதரிடம் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் சிரிப்பில் அரங்கு அதிர்கிறது. நாடக நடிகர் வடிவேலு சொல்லும் காட்சிகளிலும் அரங்கு அதிர்கிறது. இது வெறுப்பில்.நான்கு வேடங்களிலும் வித்தியாசம் காட்டி ஒற்றை ஆளாக படத்தை கட்டி ஆள்கிறார் வடிவேலு. இந்த ஓவர் டோஸே படத்தின் பெரிய ஓட்டையாகவும் அமைந்து விடுகிறது. அழகப்பன் லோக்கல் கள்ளச் சாராயத்தை எமலோகத்துக்கு கடத்துவதும், எமன் மற்றும் கிங்கரப் படைகளுக்கு ஊற்றிக் கொடுத்து எமனின் ஆட்களை வைத்தே எமனை கொலை செய்ய முயற்சிப்பதுமான இயக்குனரின் சிறுபிள்ளை சிந்தனை படம் நெடுக சிற்றாறு போல ஒடுகிறது. ஷங்கர் பட கிளைமாக்ஸ் போல் அழகப்பனால் சட்டென்று பூலோகம் புண்ணிய லோகம் ஆகும் காட்சியில் நாலு நாள் நரகத்தில் இருந்து வந்தது போல் அப்படியொரு அவஸ்தை.
 
ரம்பையாக வரும் யாமினி ஷர்மா, அழகா...அழகா... என்று அழகப்பனிடம் வழிகிறார். மீதி நேரம் இந்திரனின் கொலு மண்டபத்தில் ஆடுகிறார். நாரதராக நாசரின் வேடம் கன கச்சிதம்.
 
படத்தின் இன்னொரு ஹீரோ, கலை இயக்குனர் தோட்டாதரணி. அமெச்சூர் நாடகமாக வேண்டிய படத்தை, தனது அரங்க அமைப்பால் ஓரளவு காப்பாற்றியிருக்கிறார்.சபேஷ் - முரளியின் பாடல்களை விட பின்னணி இசை படத்துக்குப் பலம். இதனுடன் கண்களை உறுத்தாத கோபிநாத்தின் ஒளிப்பதிவையும், ஹர்ஷாவின் படத்தொகுப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். நீள நீளமான அறிவுரை வசனங்கள், அழுத்தமில்லா அம்புலிமாமா காட்சிகள், படத்தில் கொஞ்சமே இருக்கும் காமெடியையும் கடலில் கரைத்த காயமாக்கி விடுகிறது.
 
சிறிது நன்மையும் நிறைய தீமையும் செய்தவர்கள் சிறிதுநாள் சொர்க்கத்தில் இருந்து விட்டு நிரந்தரமாக நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது.
 
உண்மை! படம் பார்க்கும்போதே இதனை உணர முடிகிறது.